தஞ்சாவூர்:

வீட்டில் திருட வந்த கொள்ளையனை, வயதான தம்பதிகள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பையும், பாராட்டுதலையும் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் நெல்லையில், கொள்ளையடிக்க கொள்ளையர்களை முதிய விவசாய தம்பதிகள், அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தஞ்சை தம்பதிகளும் வீட்டிற்கு கொள்ளையடிக்க கொள்ளையனை மடக்கி உள்ளனர்.

கொள்ளையனை மடக்கிப் பிடித்த தஞ்சை தம்பதிகள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனியப்பன், இவரது மனைவி பெயர் இந்தியா. வயதான தம்பதிகளான இவர்கள்  கடலை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுடன் அவரது மகன் குமரேசனும்  வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று  இவர்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு அதிகாலை ஊர் திரும்பினர். அப்போது, வீட்டின் வெளிப்புற கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே செல்ல முயன்ற போது, வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே  ஓடி வந்ததை கண்டதும், எதிரே வந்த பழனியப்பனை கீழே தள்ளிவிட்டு, மர்ம நபர் ஓட முயன்றார்.  ஆனால் அதற்குள் சுதாரித்த பழனியப்பன் மனைவி இந்திரா, கொள்ளையன் மூக்கில், கையால் ஓங்கி குத்தியுள்ளார். அவருக்கு துணையாக குமரேசனும் களமிறங்க, கொள்ளையன் அவர்களிடம் சிக்கி நிலைகுலைந்தார்.

இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் திரள, கொள்ளையனை மாத்து மாத்து என்று ஆளாளுக்கு மாத்தி அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். அவனிடம் இருந்து, சுத்தியல், கம்பி மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட பணம், ஒரு செயின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளையனை கைது செய்தனர். விசாரணையில், கொள்ளையடிக்க வந்தவன் பெயர் ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது. கொள்ளையனை மடிக்க பிடிக்க தம்பதியினருக்கு அந்த பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

சமீபத்தில், நெல்லை கடையம் பகுதியைச் சேர்ந்த விவசாய தம்பதிகள், கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை தங்களது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சரமாரியாக தாக்கி அடித்து விரட்டினர். இது தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அவர்கள் சுதந்திரத்தின விழா வின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதீத வீரதீர விருது வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.