சிவகாசி,

டந்த 25 நாட்களாக நடைபெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 22ந்தேதி (திங்கட்கிழமை) முதல் வழக்கம்போல் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன்  நேற்று இரவு வரை  நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர்.

சுற்று சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டும், பட்டாசு வேலை செய்யும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

25 நாட்களாக  தொடர்ந்து  போராட்டம் நடைபெற்றதன் காரணமாக  பட்டாசு  தொழிலை நம்பியிருக்கும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு  பட்டாசு ஆலை அதிபர்களுடன்  அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

அமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து, கடந்த   25 நாட்களாக நடைபெற்ற பட்டாசு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக பட்டாசு  ஆலை உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும்,  வரும் 22ந்தேதி முதல்  பட்டாசு ஆலைகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.