டில்லி

பாஜக அரசு முத்தலாக் தடை மற்றும் விதி எண் 370 நீக்கத்துக்குப் பிறகு  பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜக பல வருடங்களாகத் தனது தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் விஷயங்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, விதி எண் 370 நீக்கம்,  பொது சிவில் சட்டம் மற்றும் முத்தலாக் தடை ஆகியவை ஆகும். பல வருடங்களாக இவை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தாலும் இதுவரை இவை அனைத்தும் காகித அளவில் மட்டுமே உள்ளதாகவும் நடைமுறைக்கு வராது எனவும் பலரும் கூறி வந்தனர்.

சமீபத்தில் உடனடி முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் உடனடி முத்தலாக் சொல்வோருக்குத் தண்டனை அளிக்க  முடியும். இதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் எனச் சட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமியப் பெண்களுக்கு இது ஒரு திருப்தியை அளித்துள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் திட்டமும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். அதை நிரூபிப்பது போல்  உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கை தினமும் விசாரிக்க த்டங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் பல நுண்ணிய மதம் மற்றும் அரசியல் தலையீடு உள்ள போதும் கோவில் அமைப்பது இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

பாஜகவின் நெடுநாள் கோரிக்கையான விதி எண் 370 நீக்கம் என்பது  நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தேசிய மற்றும் இந்துத்துவா மக்களுக்குப் பெரிதும் மகிழ்வை அளித்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு தற்போது இரு அவைகளிலும் உள்ள அதிக உறுப்பினர்கள் இந்த மசோதா நிறைவேறப் பெரிதும் ஒத்துழைத்துள்ளனர். பாஜகவுக்கு அரசியல் ரீதியாக இது மாபெரும் வெற்றி என்பது மறுக்க முடியாததாகும்.

இது மிகவும் சவாலான பணி எனினும் இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதாவை நிறைவேற்றிஉளார்.  இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை அமித்ஷா சுமார் ஒரு மாதம் முன்பிருந்தே தொடங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் பல கட்சிதலைவ்ர்களையும் சந்தித்து பிஜி ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

இது குறித்து பாஜக தலைவர் ஒருவர், “தற்போதைய நிலையில் பாஜகவுக்கு  இரு அவைகளிலும் பெரும்பான்மை உள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அடுத்தது பொது சிவில் சட்டமாக இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.