மதிய  செய்திகள்  – 29\08\16
Afternoon news
 
📡திருவள்ளூரில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு – கட்டுப்பாட்டு அறை திறப்பு: திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை கலக்கி வரும் மர்மக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பீதியை அதிகரித்துள்ளது. இதுவரை காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று நோய் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
📡 நகராட்சி, மாநகராட்சி தெரு விளக்குகள் எல்இடி பல்புகளாக மாற்றப்படும்: முதல்வர் ஜெ., அறிவிப்பு:  சென்னை: நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள தெரு விளக்குகள் அனைத்தும் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் ரூபாய் 3, 229 கோடியில் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
📡ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு ஸ்ரீநகர் பயணம். ஸ்ரீநகர்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 4-ம் தேதி ஸ்ரீநகர் செல்கின்றனர். காஷ்மீரில் நிலவி வரும் நிலைமை குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
📡சத்தீஸ்கரில் வீட்டில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை நடத்திய மருத்துவர் கைது.ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வீட்டில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை நடத்திய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📡சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைவதே தங்களின் அடுத்த இலக்கு: திருப்தி தேசாய். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைவதே தங்களின் அடுத்த இலக்கு என்று சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
📡குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து: நடிகர் அருண்விஜய்க்கு போலீஸ் கெடு. சென்னை: நடிகர் அருண் விஜய் நேரில் வந்து கையெழுத்திட போக்குவரத்து பிரிவு போலீசார் கெடு விதித்துள்ளனர். குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் அருண் விஜய் தேடப்பட்டு வருகிறார். போலீஸ் கெடுவை அடுத்து வழக்கறிஞருடன் ஆஜராக அருண்விஜய் முடிவு செய்துள்ளனர். பாண்டி பஜார் போக்குவரத்து போலீஸ் பிரிவில் அருண்விஜய் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
📡உயிர்பலிக்கு காத்திருக்கும் குடிநீர் தொட்டி அப்புறப்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு. திருச்செங்கோடு : மல்லசமுத்திரம் அருகே பருத்திப்பள்ளி சீத்தக்காட்டில் சிதிலமடைந்த நிலையில் உயிர்பலிக்கு காத்திருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📡காஷ்மீரில் 51 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது!ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்ஹட்டா, மகராஜ்கஞ்ச் பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த மாதம் 8ம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதையடுத்து நிகழ்ந்த வன்முறைகளால், இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். 3400-க்கும் மேற்பட்டோர் பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📡பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து: 5 பேர் மாயம்: பீகார் மாநிலம் பகல்பூரில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் மீட்கப்பட்டனர். மேலும் மாயமான 5 பேரை தேடும் பணியில்  மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
📡மத்திய ஜவுளித்துறை அமைச்சர்ஸ்மிருதி இரானி அரசுக்கு சொந்தமான கடைகளில் ரூ8 லட்சத்துக்கு சேலைகளை வாங்கிவிட்டு ஜவுளித்துறையின் கணக்கில் சேர்க்க சொல்வதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து ஜவுளித்துறை செயலர் ரேஷ்மி வர்மா, பிரதமர் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📡பட்டுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுவர்கள் பலி. பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மணிமாறன் என்பவரது மகன் ஸ்ரீதர் (4) மற்றும் ரமேஷ் என்பவரின் மகன் மணிகண்டன் (6) மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
📡முதல்வர் ஜெ.விடம் மனு கொடுக்க வந்த வியாபாரிகள் 300 பேர் கைது. முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க வந்த சேலம் வியாபாரிகள் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை தாம்பரம் அருகே கிருஷ்ணாபுரத்தில் 300 பேரையும் மடக்கி போலீசார் கைது செய்தனர். சுங்கக் கட்டணம் முறைகேடு குறித்து முதல்வரை சந்தித்து வியாபாரிகள் புகார் மனு அளிக்க வந்தனர்.
📡முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைவு: சட்டப்பேரவையில் இரங்கல். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டாயுதபாணி மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 4 நாட்கள் விடுமுறைக்கு பின் கூடிய சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து மானியக் கோரிக்கையின் விவாதம் நடைபெறுகிறது.
📡அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். அசென்சன் தீவு: அட்லாண்டிக் பெருங்கடலில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
📡என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை சட்டபடி சந்திக்க தயாராக உள்ளேன் என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
📡இறந்த மனைவியை தோளில் எடுத்துச் சென்றவரின் குடும்பத்திற்கு உதவும் பஹ்ரைன் பிரதமரின் மனிதநேயம்!! புவனேஸ்வர்: ஒரிசாவில் இறந்த மனைவியின் சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, மகளுடன் 10 கி.மீ நடந்த நபரின் குடும்பத்திற்கு பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா உதவ முன்வந்துள்ளார். முன்னதாக நேற்று பஹ்ரைன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அழைப்பு வந்துள்ளது. இதில் இவ்வாறு தனா மஜியின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எத்தனையோ கோடீஸ்வரர்கள் இருப்பினும், யாரும் இதுவரை உதவ முன்வராத நிலையில், பஹ்ரைன் பிரதமர் உதவ முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது.
📡சில்லரை மது விற்பனை கூடங்களுக்கு அனுமதி: புதுச்சேரி பட்ஜெட்.புதுச்சேரியில் புதிய சில்லரை மது விற்பனை கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையில் உள்ள தெரு விளக்குகள் அனைத்தும் எல்இடி பல்புகளாக மாற்றப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📡சரியான நேரத்தில் மழை பெய்ததால் ஏற்காட்டில் மிளகு காய்ப்பு, ஏற்காட்டில் மிளகு செடியில் நல்லமுறையில் காய்ப்பு பிடித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
📡விளையாட்டு வீரர்களுக்கு மோடி வாழ்த்து, இன்று (ஆகஸ்ட் 29) இந்திய தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தேசிய விளையாட்டு தினத்தில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள் நமது சமூகத்தில் எப்போதும் ஜொலிப்பார்கள் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
📡வெளிநாட்டினர் குட்டை பாவாடை அணியகூடாது, இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணியக் கூடாது என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான 1363 என்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பிறகு மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவர்களுக்கு வைக்கப்படும் வரவேற்பு பதாகைகளிலேயே எவற்றை எல்லாம் செய்யலாம், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டை குறிப்பிட வேண்டும்.குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால், இரவில் தனியாக வெளியில் சுற்றி திரியக் கூடாது, ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடைகளை அணியக் கூடாது. அவர்கள் செல்லும் வாகனத்தின் நம்பர் பலகையையும் போட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். அந்த நம்பர் பலகை போட்டோவை தங்கள் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் சொல்ல வேண்டும். நமது நாட்டிற்கு வருபவர்களுக்கு ஏன் ஆடை கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.
📡சென்னையில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இது டெங்கு என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் இதுவரை டெங்கு என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட வில்லை. மர்மக் காய்ச்சல் என்று பொதுவாக கூறி விட்டு போய் விடுகிறார்கள் சுகாதாரத் துறையினர். இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமும், குழப்பமும், பீதியும் அடைந்துள்ளனர்.
📡முன் ஜாமீன் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றக்கிளையில் ஆஜர் ஆவதற்காக சசிகலா புஷ்பா எம்.பி. மதுரை வந்து தனியார் ஓட்டலில் தங்கியிருக்கிறார். அங்கே மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், சுபாஷ்பாபு ஆகியோருடன் வழக்கை எதிர்கொள்வது எப்படி என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
📡அமிர்தி சரணாலயத்தில் அரிய வகை வெள்ளை மயில் குஞ்சு பொரித்தது, வேலூர் அடுத்த அமிர்தி சிறு வன சரணாலயத்தில் அரிய வகை மயில், குஞ்சு பொரித்துள்ளது. வேலூரில் இருந்து 28 கிமீ தொலைவில் 10 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது அமிர்தி. இங்கு சிறு வன உயிரியல் சரணாலயம் உள்ளது. மான், மயில், நரி, முள்ளம்பன்றி, மரநாய், மலைப்பாம்பு, ஆமை, முதலை, கழுகு, வாத்து, புறா, வண்ணக்கிளிகள் உள்ளிட்ட பல வன உயிரினங்கள் உள்ளன. குழந்தைகள் விளையாடும் சிறுவர் பூங்காவும் உள்ளது. வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் அமிர்தி சரணாலயம் திகழ்கிறது. இச்சரணாலயத்தில் தேசிய பறவையான மயில்கள் 19 உள்ளன. இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வண்டலூர் சரணாலயத்தில் இருந்து 4 அரியவகை வெள்ளை மயில்கள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு வெள்ளை மயில் கடந்த மாதம் 4 முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. கடந்த வாரம் ஒரு முட்டை பொரிந்து குஞ்சு வெளிவந்தது. புதிய குஞ்சுவை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்
📡ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக 3-வது முறையாக அமலாக்கப் பிரிவு சம்மன், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கப் பிரிவு 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
📡கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு,  கள்ளக்குறிச்சி அருகே கண்டாச்சிமங்கலத்தில் அரசு பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்கள் விஜயரசு, அஜித்குமார் மற்றும் கல்லூரி மாணவர் அஜித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
📡நாராயணசாமி போட்ட முதல் பட்ஜெட்.. எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு!புதுச்சேரி சட்டப்பேரவையில் முதன் முறையாக புதுச்சேரி முதலமைச்சர்நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
📡உள்ளாட்சி தேர்தலுக்கு இப்போதே தயார் வீடு,வீடாக சிக்கன், மட்டன் கொடுத்த நகராட்சி துணைத்தலைவர். ஆத்தூரில் நகராட்சி துணைத்தலைவர் தனது வார்டுக்குட்பட்ட வீடுகளுக்கு தலா அரைக்கிலோ ஆட்டுக்கறியும், சிக்கனும் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
📡போலீசார் தினமும் குடும்பத்தினரை மிரட்டுகின்றனர்… சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு மதுரை: என் கணவர் மீதும் மகன் மீதும் பொய் வழக்கு போடப்போவதாக தினம் தோறும் போலீசார் என்னை மிரட்டி வருகின்றனர் என்று ராஜ்யசபா எம்.பி.சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியுள்ளார்.
📡டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிவு, இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.67.18 காசுகளாக உள்ளது
📡பட்ஜெட் விவரங்கள் இணையதளத்தில் கசிவு: காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய அதிமுக வலியுறுத்தல், பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பு பட்ஜெட் விவரங்கள் இணையதளத்தில் வெளியானதால், காங்கிரஸ் அரசை துணைநிலை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.
📡நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்வு முறை: புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் சென்னை: நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்வு முறையில் மாற்றம் செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். புதிய மசோதா மூலம் இனிமேல் கவுன்சிலர்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஏற்கனவே சமீபத்தில் மாநகராட்சி மேயர்கள் தேர்வில் மற்றம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
📡கடல் வழியாக திவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சட்ராக் ஒத்திகை நிகழ்ச்சி, கடல் வழியாக திவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சட்ராக் ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது. கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோர காவல்படையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள ஒத்திகை மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
📡கடையம் அருகே கூண்டு வைத்தும் பலனில்லை சிறுத்தைகள் மீண்டும் அட்டகாசம் நெல்லை மாவட்டம், கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவிந்தபேரி, அழகப்பபுரம், பெத்தாம்பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், சம்பன்குளம், தோரணமலை, கானாவூர் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் நெல், கடலை, கரும்பு, சிறுகிழங்கு, உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். வனத்தில் இருந்து அவ்வப்போது ஊருக்குள் புகும் சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் பயிர்களையும், தோட்டத்தில் காவல் இருக்கும் நாய்களையும் வேட்டையாடி செல்கின்றன. மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் மட்டுமின்றி வீட்டுத் தொழுவங்களில் உள்ள மாடுகள், கன்றுகளையும் கடித்துக் கொன்று மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. கடந்த ஜூன் 23ம் தேதி கோவிந்தபேரி கிராமத்தில் உள்ள ஆவுடையானூர் ஸ்டீபன் என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு காவலுக்கு இருந்த 2 நாய்களை கடித்துக் கொன்றது.  மறுநாள் ராஜாங்கபுரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பரமசிவன் என்பவரது ஆடுகளில் ஒன்றை சிறுத்தை கடித்துக் குதறியது. இதைக்கண்ட மேய்ச்சல்காரர்களான முருகேசன், தாமஸ் ஆகியோர் சத்தம் போடவும் ஆட்டை அரைகுறையாகப் போட்டுவிட்டு மலைப்பகுதிக்கு ஓட்டம் பிடித்தது. இதுதொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரையடுத்து கடையம் வனச்சரகர் இளங்கோ தலைமையில் கோவிந்தபேரி வந்த வனத்துறையினர் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க இரும்புக் கூண்டு வைத்தும் இன்று வரை சிக்கவில்லை.
📡பத்திரிக்கையாளர் மன்றத் தேர்தல்: 3 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத் தேர்தலை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஒய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சந்துருவை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡மியான்மர் அதிபர் ஹிடின் கியாவிற்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு. அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் ஹிடின் கியாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபப்ட்டது. அவரை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இருவரும் வரவேற்றனர்.
📡பண்ருட்டி அருகே அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம். பண்ருட்டி அருகே அங்குச்செட்டி பாளையத்தில் உள்ள பள்ளியை முற்றுகையிட்டுப் பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குசெட்டி பாளைம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள் வகுப்பு பிரித்தற்காக எதிர்ப்பு தெரிவித்தும், ஜாதி பிரச்னையை தூண்டும் வகையில் பேசியதாக ஆசிரியர்களைக் குற்றம் சாட்டியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் கீதா மற்றும் போலீசார் சமரசம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📡இந்தியாவில் ‘ஸ்கர்ட்’ அணிய வேண்டாம்!’ – வெளிநாட்டினருக்கு சுற்றுலா அமைச்சரின் அறிவுரை. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ‘ஸ்கர்ட்’ அணிய வேண்டாம் என்று மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்து உள்ளார்.
📡தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம், வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம், பார்வெள்ளி விலை ரூ.235ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2948 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,530 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,584 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.47.90 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.44,805 ஆகவும் உள்ளது.
📡கூடங்குளம் 2வது அணு உலை மின்சாரம்: மத்திய மின்தொகுப்பில் இணைப்பு. கூடங்குளம் 2வது அணு உலையில் உற்பத்தியான மின்சாரம் மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது. சரியாக காலை 11.17 மணிக்கு மின்சாரம் மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூடங்குளம் 2வது அணு உலையில் இன்று 60 மெகாவாட் மின்சாரம் துரத்தி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
📡லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு இல்லை. அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடி சப்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் பரவியது.