டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை  6 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், கடந்த 6ந்தேதி ஆஜர் படுத்தப்பட்டபோது மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் ஆஜர்படுத்தப் பட்டார்.

அதைத்தொடர்ந்து,  சிபிஐ தரப்பில், கார்த்திக் சிதம்பரத்திடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆகவே  6 நாட்கள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு கார்த்தி சிதம்பரம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  தன்னை இரவில் தூங்க விடாமல் சிபிஐ போலீசார் துன்புறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலில் செல்ல அனுமதி அளித்தும், வரும் 12ந்தேதி அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்  சிபிஐ கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் 12 நாளாக உயர்ந்துள்ளது.