kanyakumari-1
குமரி மாவட்டம் உதயமான நாள் இன்று….01-11-2016  குமரி மாவட்டத்துக்கு வயது 60 ஆகிறது.
பல்வேறு போராட்டங்கள், உயிர்த்தியாகங்கள் மூலம் உருவாகியதுதான் இன்றைய குமரி மாவட்டம்.
திருவிதாங்கூர் அரசின் ஆதிக்கத்தில் இருந்ததால் தமிழ் பேசும் குமரி மாவட்ட மக்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். அரசின் உதவிகள் மற்றும் திட்டங்கள் தமிழர் வசிக்கும் பகுதிகளில் திட்டமிட்டு தடுக்கப்பட்டது.
திருவிதாங்கூர் அரசில் இந்து ஆகம முறைப்படியே அரசாட்சி செய்யப்பட்டது. இதனால் சாதிக்கொடுமைகள் தலைவிரித்தாடின. இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க தமிழ் மக்கள் மலையாள நாயர்கள் மற்றும் அவர்களை சார்ந்த பிரிவினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
1948ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டங்களின் விளைவாக மலையாள காவல்துறையினரால் குமரிமாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் பல தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மிகக்கடுமையான அடக்கு முறையை கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இவர்களின் இந்த அடக்குமுறைகள் தொடர்ந்ததால் பலர் காட்டு பகுதிகளுக்கும், எல்லையை கடந்து அன்றைய தமிழ்நாட்டுக்குள்ளும் தஞ்சம் புகுந்தனர்.
இறுதி கட்டமாக 1954 ஆகஸ்ட் 11ல் மார்த்தாண்டத்தில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் மலையாள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பதினொன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக 01-11-1956 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி தாய் தமிழகத்துடன் இணைந்தது.
மக்களின் விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு மலையாளிகளால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பல்வேறு நீர்பாசன திட்டங்கள், சுற்றுலாத்துறையில் மேம்பாடு மற்றும் சித்த மருத்துவ ஆய்வு மையம் போன்றவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்தது.
இவ்வாறு அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி, அடிமைத்தனத்திலிருந்து வெளிவர பல உயிர்த்தியாகங்கள் செய்து பெற்றது தான் கன்னியாகுமரி மாவட்டம்.
முன்பொரு காலத்தில் குமரி கண்டம் என்றழைக்கப்பட்டு நாகரீகமே இங்கு தான் தோன்றியதாக கூறப்படும், தமிழ் மொழியே இங்கு தான் தோன்றியதாக ஆய்வுகளில் கூறப்படும் மிகச்சிறப்பு மிக்க மாவட்டம்
தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது.
இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறன. அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்னியாகுமரி அம்மன் என்னும் தேவதையை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் ‘குமரிப் பகவதி’ என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது.
சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் ‘நாஞ்சில் நாடு’, ‘இடை நாடு’ ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் வந்ததாகத் தெரிகிறது.
சுற்றுலாத் தலங்கள்
நாகர்கோவில்
சுசீந்திரம்
வட்டக் கோட்டை
பத்மநாபபுரம் அரண்மனை
சிதறால் சமண நினைவு சின்னங்கள்
மாத்தூர் தொட்டிப் பாலம்
திருநந்திக்கரை குகைக் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
உதயகிரிக் கோட்டை
உலக்கை அருவி
பேச்சிப்பாறை அணைக்கட்டு
பெருஞ்சாணி அணைக்கட்டு
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
முட்டம் கடற்கரை
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
சங்குத்துறை கடற்கரை
ஆலஞ்சி கடற்கரை