டெல்லி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அகமது மரணத்தை மத்திய அரசு அவமரியாதை செய்த சம்வபம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்துள்ளார்.

இதற்காக பட்ஜெட்டை ஒத்திவைக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அதை பொருட்படுத்தாமல் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருந்தபோதே அகமது இறந்துள்ளார்.

கேரளா மாநிலம் கண்ணூர் தொகுதியில் இருந்து 7 முறை அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். நாடாளுமன்றத்தில் நிலை குலைந்த அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரது நிலைமை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூட எந்த தகவலையும் மருத்துவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். பாஜ அமைச்சர் ஜிதேந்திர சிங் மட்டும் உள்ளே சென்று அகமதுவை பார்த்தார், அதற்கு பிறகு யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

இதனால் அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் செயல்பாட்டை கண்டித்து நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்களும் அகமதுவை பார்க்க குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சோனியா காந்தியும் மருத்துவமனையின் நடைபாதையில் நின்று கொண்டு மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை.

‘‘அபாய கட்டத்தில் உள்ள ஒரு நோயாளியின் குடும்பத்தினரை இவ்வாறு நடத்தி பார்த்ததில்லை’’ என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

அகமது மகன் கூறுகையில்,‘‘ குறைந்தபட்சம் எனது தந்தையை பார்க்க அனுமதி கேட்டேன். உடல் நிலை குறித்த விளக்கம் கூட கேட்கவில்லை. ஆனால் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எனது தந்தையின் உடல்நிலை குறித்து விளக்கம் கேட்கவும், அவரை பார்க்கவும் மகன் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது’’ என்றார்.

நான் டாக்டர் பாபு சேசாத் என்பவரிடம் கேட்டேன்.. அதற்கு அவர்…..‘‘இது எங்களது அடிப்படை உரிமை. யாரையும் பார்க்க அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார். செயற்கை சுவாச கருவிகள் பொருத்த எங்களிடம் ஆலோசனை கூட மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் என்ற ரீதியில் நான் கேட்கவி¬ல். இந்திய குடிமகனில் மகனாக கேட்டேன். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது’’ என்றார்.

அகமது மகள் கூறுகையில், ‘‘மருத்துவ தொழிலில் இருப்பவர்கள் இது போல் நடந்துகொண்டதை நான் எங்கேயும் பார்க்கவில்லை. இது அவர்களது தொழிலுக்கு நேர்மாறான செயல்’’ என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிறகு இன்று அதிகாலை அகமதுவை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அதிகாலை 2.50 மணிக்கு அகமதுவின் மரண செய்தி அறிவிக்கப்பட்டது.

‘‘பட்ஜெட் எவ்வித தடங்கல் இன்றி தாக்கலாக வேண்டும் என்ற காரணத்தினால் மோடி அரசு அகமதுவின் மரணத்தை ஒரு நாள் தாமதமாக அறிவிக்க முயற்சித்துள்ளது. ஒரு முக்கிய தலைவரை இந்த அரசு எப்படி நடத்துகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று அக்கட்சியின் தலைவர்கள் கேரளாவில் தெரிவித்தனர்.