சென்னை,

குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றிபெற்றதற்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

மோடி நிகழ்த்திய தில்லுமுல்லுகளையும் மீறி காங்கிரஸ் பேரியக்க வேட்பாளர் அமகது பட்டேல் வெற்றிபெற்றமைக்கு எனது மகிழ்ச்சியையும், நல்வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் ‘ராமராஜ்யம்’ அமைப்போம் என்று கூறிக்கொண்டே, ‘ராவண ராஜ்யம்’ நடத்திக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதுமட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் பாரதியஜனதா ஆட்சி மலரும் எனக்கூறியுள்ள இவர், அதற்காக பல்வேறு மாநிலக்கட்சிகளைப் பல வழிகளில் மிரட்டி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக மாறி வருகிறார்.

தொடர்ந்த இவ்வாறு செயல்படும் மோடிக்கு சர்வாதிகாரிகள் ஹிட்லருக்கும், முசோலினிக்கும் முடிவில் ஏற்பட்ட நிலையை நினைவுகூற விரும்புகிறேன்.

உலகிற்கே வழிகாட்டியாகத் திகழும் இந்தியாவின் ஜனநாயக ஆட்சி முறை மோடியின் ஆட்சியில் ஆபத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.