சென்னை:

பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமை விரும்பவில்லை என்று அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரும்,  முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

பொன்னையன்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை களை நடத்தி வருகின்றன. சில கட்சிகள் நேரடியாகவும், பல கட்சிகள் மறை முகமாகவும் தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் என்று  எதிர்பார்க் கப்பட்டது.

ஆனால் அதிமுக எம்.பி. தம்பிதுரை, பொன்னையன் உள்பட சிலர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

ஆனால், அவையனைத்தையும் பொய்யாக்கும் வகையில்,  கடந்த வாரம் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  அதிமுகவினர், பாஜகவினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன் காரணமாக அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இதற்கிடையில், அதிமுக பாமக இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பதாகவும் மற்றொரு தகவல் பரவியது.

ஆனால், இதை கண்டுகொள்ளாமல், அதிமுக தலைமை 40 நாடாளுமன்ற தொகுதி களுக்கும் வேட்புமனு தாக்கல் விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்ய லாம் என அறிவித்தது. கூட்டணி குறித்து தேர்தல் முடிவுக்கு பின்பு பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைமை பாஜகவிடம் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இதன் காரணமாக  அதிமுக பாஜக கூட்டணி விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில்  அதிமுக தனித்து களமிறங்கப்போகிறதா? என்றும்  அரசியல் களத்தில் விவாதங்கள் சூடு பறந்தன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்னையன். அப்போது,  பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமை விரும்பவில்லை என்று அதிரடியாக தெரிவித்தார்.

இதற்கு காரணம் என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, கடந்த  5 ஆண்டு களுக்கு முன்பிருந்த பாஜக தற்போது இல்லை என்று குற்றம் சாட்டியவர்,   கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான  பாஜக அரசு, தமிழகத்திற்கு செய்த நன்மைகளை  விட,  தீமைகளைத்தான்  அதிகம் செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலானது, தமிழகத்தில்  தி.மு.க., அ.தி.மு.க., பாமக அ.ம.மு.க. மற்றும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக போன்ற  கட்சிகளுக்கும்  மரண போராட்டம்தான் என்பதில் ஐயமில்லை.