சென்னை:

வரும் 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.


முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த 31ம் தேதி பதவி ஏற்றார்.

இதைத் தொடர்ந்து அவர் மாவட்ட வாரியமாக சுற்றுப் பயணம் செய்து நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.

இதில் வரும் 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்துகிறார். 9ம் தேதி வரை இந்த கூட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், தொகுதி வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள், சார்பு அணி நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து 6ம் தேதி திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆலோசனை நடக்கிறது. இதேபோல் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.