attur_admk
வாழப்பாடி:  அ.தி.முக. நகரச் செயலாளர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி அவரது வீட்டின் முன் தி.மு.க.,வினர் திரண்டு போராட்டம் செய்தனர்.  இதையடுத்து, அ.தி.மு.க. நகர செயலாளரின் தந்தை மாரடைப்பால் இறந்தார். அதனால் திமுகவினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அதிமுக நகர செயலாளர் சிவக்குமார், வீட்டில்  வாக்காளர்களுக்கு அளிக்க இரண்டு  கோடி பணம் பதுக்கி வைத்திருப்பதாக நேற்றிரவு திமுகவினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிவக்குமார் வீட்டின் முன் முற்றுகையில் ஈடுப்பட்டார்கள்.
இந்த தகவலறிந்த அதிமுகவினரும் அங்கு திரண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வந்த தேர்தல் பறக்கும் படையினர் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், சிவக்குமாரின் தந்தை நாகராஜ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, நாகராஜின் இறப்புக்கு காரணமான தி.மு.க.,வினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என  கோரி வாழப்பாடி காவல்நிலையத்தை  அதிமுகவினர் முற்றுகையிட்டனர்
இதையடுத்து  திமுக-வினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.