சென்னை:

டைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டு உள்ளதாக தி.மு.க, சார்பில் தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம்  தி.மு.க சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் புகார் மனு அளித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி  நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி தீவிர போட்டியில் இறங்கி உள்ளது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் தி.மு.க, தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.

திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார்   மனுவில், நாங்குநேரி , விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலில் அதிக பாதுகாப்பு அளிக்கவேண்டும். பதற்றமான இடங்களில் மேலும் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும். வாக்கு எண்ணிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும். அ.தி.மு.க-வினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதால் கூடுதலாக கண்காணிக்க வேண்டும். மேலும் பத்திரிகையாளர்களும் அதனை கண்காணிக்க உரிய வகையில் அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன்,   விக்கிரவாண்டி பகுதியில் வாக்குச்சாவடிகளை அ.தி.மு.க கைப்பற்ற உள்ளதாகவும், வன்முறைக்கு வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகளை கணக்கெடுத்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

நாங்குநேரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அ.தி.மு.க.வினர் பணம் விநியோகம் செய்வதை மறைப்பதற்காக தி.மு.க மீது வீண் பழி சுமத்துகிறார்கள் எனப் பதிலளித்தார்.