சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகத்தில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை செய்து வருகின்றனர். இதில் கலந்துகொண்ட அதிமுக  ஏப்ரல் மாத பிற்பகுதியில் தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர், 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளனர். தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் 6 பேர் கொண்ட குழு 2 நாட்கள் தமிழகத்தில் முகாமிட்டு ஆய்வு நடத்துகிறது.  இந்த குழுவில் துணை தேர்தல் கமிஷனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீ வத்சவா, தேர்தல் ஆணைய செயலாளர் மலே மல்லிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள்  கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக உயர்மட்ட குழுவினர், கோடைகாலத்தின்  கடும் வெப்பத்தை  தவிர்ப்பதற்காக ஏப்ரல் மூன்றாம் அல்லது நான்காவது வாரத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்துமாறு வருத்தி உள்ளது. அதுபோல   பெரும்பாலான கட்சிகள் ஒரே நாளில் அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து,  வருமான வரித்துறை அதிகாரிகளுடனும், வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாளை (செவ்வாய்கிழமை), பொதுப் பிரச்சினைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக, தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.