அ.தி.மு.க பொதுச்செயலாளராக சாதிப் பிண்ணனியில் சசிகலா முயற்சிக்கிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற சாதியினர் திரண்டால் அ.தி.மு.க. உடையும் என்று சுப்பரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மறைந்த நிலையில் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  சசிகலாவை சந்தித்தும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியசுவாமி, “சாதி பின்புலத்தை வைத்து, பொதுச்செயலாளராகிவிட திட்டமிட்டுள்ளார் சசிகலா. இவரை எதிர்த்து பிற சாதியினர் அணிதிரளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பவதாவது:
“தமிழகத்தைப் பொறுத்த வரை, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அரசியல் ரீதியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மையே. . ஜெயலலிதாவோடு, தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித முரண்பாடுகளும் இருந்ததில்லை. அவர், சிலரின் கைப்பாவையாக மாறி, தமிழக நலன்களுக்கு எதிராக செல்கிறார் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்த பிறகு  தான், அவருக்கு எதிராக  செயல்பட துவங்கினேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துத்துவாவுக்கு எதிராக இருப்பதோடு, ஊழல் செய்யும் கட்சிகளில் முதன்மையானதாக இருக்கிறது தி.மு.க.

அதனால்தான் அக்கட்சியையும்; அக்கட்சித் தலைவர்களையும் எதிர்த்தேன். ராமர் சேது விவகாரம் தொடர்பாக, அப்போதைய முதல்வர் கருணாநிதி, நான் சொல்லும் விபரங்களை, காது கொடுத்து கேட்டிருந்தால், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த அவர்கள் இவ்வளவு மும்முரமாக இருந்திருக்க மாட்டார்கள். சிலரது  சுய நலன்களுக்காக ஆயிரக்கணக்கான் கோடிகளை கொட்டி போடப்பட்ட திட்டம், அப்படியே கிடப்பில் கிடப்பதற்கான் காரணம் கருணாநிதியும், அவருடன்  இருந்தவர்களும்தான்.
அதேபோலத் தான் பல விஷயங்களிலும் ஜெயலலிதா செயல்பட்டிருக்கிறார்.
அரசியலைத் தவிர்த்து விட்டு, மக்கள் நலன் குறித்து யோசிக்க வேண்டும். இதை செய்யாத எந்த கட்சி, ஆட்சி நடத்தினாலும், அது மக்கள் விரோத அரசாகவே இருக்கும்.
 
ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்ததுமே, நான் டுவிட்டர் பக்கத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு, மருத்துவம் தொடர்பான என் ஆலோசனைகளை வழங்கினேன். ஆனால்,  உடன் இருந்து ஜெயலிதாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவியதாக அடையாளம் காட்டிக் கொண்டவர்கள், அந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் பின்னணி என்ன? அதனால்தான், சிலர் ஜெயலலிதா மறைவை ஒட்டி, சசிகலாவை மையமாக வைத்து, ஆயிரம் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதே போலத்தான், சசிகலா மற்றும் அவரது கணவர் குறித்த நடவடிக்கைகளும் இருக்கின்றன. 2011ல், தனக்கு எதிராக இவர்கள் எல்லாம் சதி திட்டம் தீட்டினார்கள் என்று சொல்லி, ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. குடும்பத்தினர் பலர் மீதும் வழக்குப் போட்டு, ஓரம்கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவர்களில் பலரும், இப்போது, ஜெயலலிதா இறந்ததும், உடலை சுற்றி, நின்று கொண்டு, தமிழக மக்களுக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
இதை, தமிழக மக்கள், அதிமுகவினர் விரும்பவில்லை. சசிகலா குடும்பத்தினரை, ஒரு அ.தி.மு.க., தொண்டன் கூட ஏற்க மாட்டான். சசிகலா, கட்சியின் பொதுச் செயலர் ஆக வேண்டும் என துடிப்பதாகத் தெரிகிறது. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே முதல்வராகவும்; ஆளும்கட்சியின் பொது செயலரகவும் இருக்கலாமா என, தமிழகத்தின் பிரதான சாதிகளான கவுண்டர், நாடார், வன்னியர் இனத்தைச் சேர்ந்த கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
சசிகலா, கட்சியின் பொது செயலர் ஆகும் முயற்சியையும் எதிர்க்கின்றனர்.
இதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் பெரிதாக வெடிக்குமானால், யாரும் முயற்சிக்காமல், அ.தி.மு.க., தானாகவே உடையும்” என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
மேலும் அவர், “ஏற்கனவே ஜெயலலிதாவை அப்பல்லோவில் வைத்துக் கொண்டு, செயல்படாத அரசை நடத்தியவர்கள், இனியாவது, வேகமான ஆட்சியை தருவார்களா  என்பதை பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா தொடர்பான சொத்துக்களை பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. முறைகேடாக எதுவும் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால், சட்டத்துக்கு புறம்பாக செயல்பட நினைப்பவர்களுக்கு, கட்டாயம் சிக்கல் ஏற்படும்” என்று சுவாமி தெரிவித்தார்.