புதுடெல்லி:

எல்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பன்சலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது. “ஆறு மாதங்கள் அல்லது இரண்டு வருட காலத்திற்கு விடுமுறை கொடுக்கலாம், அது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய விடுப்பாக இருக்கும்” என்று இந்த நீண்ட கால விடுப்புக்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, ஐந்து ஆண்டுகள் வரை ஊதியம் இல்லாமல் (எல்.டபிள்யூ.பி) கட்டாய விடுப்பில் அனுப்பப்படுபவர்களை பட்டியலிடும் பணியும் தொடங்கிவிட்டன. வேலைத்திறன், ஆரோக்கியம் மற்றும் இதற்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்டவரா என்பது போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில், இந்த திட்டத்தின் கீழ் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய ஊழியர்களை அடையாளம் காணும் பணியை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.

அதன்படி, பணியாளர்களை ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊதியமில்லாத கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். இருந்தாலும், அது ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். அது எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் மாற்றங்களை பொருத்து முடிவு செய்யப்படும்.  ஜூலை 14 அன்று இந்த உத்தரவு அறிக்கையாக அனைவருக்கும் அனுப்பப்பட்டது.

“மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் பணியாளர்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அதோடு, கட்டாய விருப்பில் அனுப்பக்கூடிய எல்.டபிள்யூ.பி பணியாளர்களை அடையாளம் காண வேண்டும்” என்று தலைமையகத்தில் உள்ள துறைத் தலைவர்களுக்கும் பிராந்திய இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.