சென்னை:

குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்கள்  மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சமீப நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அரபிக்கடலில் உருவான புயல் போன்ற காரணங்களால், அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

தற்போது  குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது  மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாகவும், இது மேலும் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய சென்னை வானிலை மையம்,  குமரி கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது.

இதனால், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி. மற்றும் மாலத்தீவு, லட்சத் தீவுப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது.

மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாகவும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

in, 2 days in