சென்னை:
எஸ்ஆர்எம் குழுமம் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி வரும் சன் குழுமம், ஏர்செல் – மேக்சிஸ் ஊழல், பிஎஸ்என்எல் முறைகேடு செய்திகளையும் வெளியிடுமா  என்று எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“நாங்கள் நடத்தி வருகின்ற இந்திய ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர்களே (சன் குழுமத்தினர்) ஏற்படுத்திக் கொண்ட பொறாமை மற்றும் பகை உணர்ச்சி காரணமாக இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் எஸ்ஆர்எம் குழுமம் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நிகழ்வை தொடர்ந்து சிலருடைய தூண்டுதல் மற்றும் பின்னணியில் சன் குழுமம் செயல்படுத்தி வருகிறது.
இந்த வகையில், ஆதிதிராவிடர்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் உள்பட 371 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை எஸ்ஆர்எம் குழுமம் ஆக்கிரமித்துள்ளதாக, வெளியாகியுள்ள செய்தியில் துளியளவும் உண்மையில்லை.
குறிப்பாக, எஸ்ஆர்எம் குறித்து சன் குழுமத்தில் வெளியாகும் செய்திகளில் ஒரு வழக்கு மேற்கோள் காட்டப்படுகிறது. ஆனால், அடிப்படையில் இந்த வழக்கே ஒரு பொய்யான வழக்காகும்.
Untitled-3
இந்த வழக்கில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டு அரசுத் துறைகள் பதில் மனு தாக்கல் செய்யவும், எஸ்ஆர்எம் குழுமம் பதில் தரவும் வாய்ப்பளிக்கப்பட்டு வழக்கும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், எவ்வித ஆதாரமுமின்றி சன் குழுமம் ஓர் இணை விசாரணையை நடத்தி வருகிறது.
371 கோடி ரூபாய் மதிப்பிலான 37 ஏக்கர் ஆக்கிரமிப்பு என்று செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால், அந்த 37 ஏக்கரில் 29 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது ஏரியாகும்.
இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் தேவையை உணர்ந்து, பல கோடி ரூபாய் செலவில் அதன் கொள்ளளவைவிட இரு மடங்கு ஏரியை ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தியும் மக்கள் சென்றுவரும் நடைபாதையும் முறையான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்தப் பகுதி கிராம மக்களே சாட்சி என்றும் மேலும், காட்டாங்குளத்தூர் வழியாக செல்லும் யாரும் அதனை பார்க்க முடியும்.
இது தவிர மீதமுள்ள எட்டு ஏக்கர் நிலம் தொடர்பாக தகுந்த ஆவணங்கள் எங்கள் குழுமத்திடம் உள்ளன என்றும் அரசிடம் முறையாகக் குத்தகைத் தொகை இன்றளவிலும் செலுத்தப்பட்டு, ரசீதுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எந்தவிதமான வழிகாட்டு நெறிமுறைகளையும் கருத்தில் கொள்ளாமல், 371 கோடி ரூபாய் முறைகேடு என்று தொடுக்கப்பட்டுள்ள வழக்கும், அது சார்ந்த செய்தியும் அடிப்படையற்றது.
சட்டப்படியாக பதில் மனு தாக்கல் செய்து இந்த வழக்கைச் சந்திக்க எஸ்ஆர்எம் குழுமம் தயாராகவே உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறபொழுது, ஒருதலைப்பட்சமாக, ஒருசாராரின் கருத்தை மட்டுமே, ஒளிபரப்புவது என்பது இயற்கை நியதி மற்றும் ஊடக தர்மத்திற்கு முரணானது.
இதேபோல், திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழுமத்தின் மருத்துவ கல்லூரி, அனுமதியின்றி இயங்கி வருவதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நல்ல முறையில் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு கல்லூரியை அங்கீகாரமற்றது என்று குறிப்பிடுவது விஷமத்தனமானது.
மேலும், சிபிஐ அதிகாரிகள் இங்கு வந்ததாக சொல்வதிலும் உண்மையில்லை என்றும் கல்லூரியின் அங்கீகாரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை இந்திய மருத்துவக் கழகத்தினுடைய இணைய தளத்தில் (எம்.சி.ஐ.) யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
இதேபோல், வருமான வரி  சோதனை என்பது, எல்லா பெரிய நிறுவனங்களிலும் நடைபெறும் ஒன்றுதான் என்றும் எஸ்ஆர்எம் குழுமத்திலும் இரு ஆண்டுகளுக்கு முன் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றாலும் முறையான ஆவணங்களின் அடிப்படையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று துறை சார்ந்த அதிகாரிகளே முடிவு செய்தார்கள்.” இவ்வாறு தனது அறிக்கையில் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்எம் கல்லூரி குழுமம் சார்ந்து சிபிஐ விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்பதுவும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதும்தான் உண்மை.
மேலும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், குற்றம் சாட்டியதாகவும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பதையும் வெளியிட்ட சன் குழுமம், அதைத் தொடர்ந்து, பதிலாக நாங்கள் கொடுத்த விளக்க அறிக்கையை ஏன் வெளியிடவில்லை?
மேலும், வன்னியர் அறக்கட்டளை தொடர்பாகவும், அவரது மகள் ஆக்கிரமிப்பு செய்த நிலம் தொடர்பாகவும் கொடுக்கப்பட்ட புகார்கள் பற்றிய செய்திகளை  சன் குழுமம் எந்த ஆரோக்கிய அரசியலின் அடிப்படையில் வெளியிடவில்லை என்று தெரிவிக்க வேண்டும்.
மதன் வழக்கில், புலனாய்வு நடைபெற்று வரும் நிலையில் அதற்கு, எங்கள் குழுமத் தரப்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் தான்தோன்றித்தனமாக குற்றச்சாட்டுகளைச் செய்திகளாக வெளியிடுவது சன் குழுமத்தின் பத்திரிகை தர்மத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மதன் அனுப்பியதாகச் சொல்லப்படும் தற்கொலைக் குறிப்பில் இல்லாத ஒரு செய்தியை, அவர் ஏதோ தான் வசூலித்த பணத்தை, எங்களது குழுமத் தலைவர் ரவி பச்சமுத்துவிடம் கொடுத்ததாகக் கூறியுள்ளார் என்று இட்டுக்கட்டிய செய்தியை சன் குழுமம் தொடர்ந்து ஒளிபரப்பும் உள்நோக்கம் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
இதேபோல, நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்ப் புகார், முழுக்க முழுக்க ஒரு சிவில் வழக்கு என்றும் உண்மை நிலவரங்கள் இப்படி இருக்க, சன் குழுமம் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதன் நோக்கத்தை அற உணர்வுள்ள மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
மேலும், இந்தத் தருணத்தில், சன் குழும ஊடகங்களிடம் மேலும் சில செய்திகளை ஒளிபரப்பித் தர வேண்டும்.
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் கைது நடவடிக்கைக்கு பயந்து, முன்ஜாமீன் கேட்டு நீதிமன்ற படிகளில் காத்திருக்கும் கலாநிதி, தயாநிதி,  ஆகியோர் பற்றிய செய்திகளைப் புலனாய்வு செய்து வெளியிட வேண்டும்.
தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்சிஸுக்கு விற்கச் சொல்லி வற்புறுத்தியதும் அதன் பின்னணியையும் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
ஒரு தொலைபேசி எண்ணைக் கொண்டு, 323 இணைப்புகள் எப்படி பெறப்பட்டன, அதனால் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் 440 கோடி ரூபாய் இழப்புக்கு என்ன பதில் என்ற சிதம்பர ரகசியத்தையும் சன் குழும புலனாய்வு குழு வெளியிட வேண்டும்.
சாதாரண ஆசிரியராக இருந்து கடும் உழைப்பால் உயர்ந்த என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எங்கள் உழைப்பின் மீதும் சந்தேகங்களை எழுப்பும் சன் குழுமத்தை நோக்கி ஒரே ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
மறைந்த முரசொலி மாறன் சென்னைக்கு வரும்போது அவரின் சொத்து மதிப்பு என்ன? தற்போது சன் குழுமத்தின் சொத்து மதிப்பு என்ன? எப்படி அது பல்லாயிரம் கோடியாக உயர்ந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட சன் குழுமம் தயாரா?
மேலும் பலமுறை விளக்கமளித்தும், தொடர்ச்சியாக எஸ்ஆர்எம் குழுமத்தின் மீது அவதூறு செய்திகளை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வரும் சன் குழுமத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க தயங்க மாட்டோம்.”