அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகியுள்ள ஆந்தாலஜி ‘புத்தம் புதுக் காலை’. இதில் ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘மிராக்கிள்’கதை தனது குறும்படத்தின் காப்பி என்று குற்றம்சாட்டியுள்ளார் அஜயன் பாலா. இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் :-
“நேற்று நண்பர் இலங்கைவேந்தன் போன் செய்து உடனே அமேசானில் ‘புத்தம் புதுக் காலை’ படம் பாருங்க என பதட்டத்துடன் சொன்னார் . என்ன என கேட்டபோது அவர் சொன்ன தகவல் ஷாக்கா இருந்தது . அதில் கடைசியாக் வரும் ‘மிராக்கிள்’ படம் அப்படியே நான் நடிக்க நிலம் நடிப்பு பயிற்சி மாணவர்களுக்காக கடந்த வருட இறுதியில் உருவாக்கி கரோனாவால் போஸ்ட் புரொட்க்‌ஷன் தாமதமாகி கடந்த மாதம் யூ-டியூப்பில் வெளியானது என் ‘சச்சின் கிரிக்கெட் கிளப்’ குறும்படம்.
இதன் கதையை அப்படியே சுட்டுவிட்டார்கள் என்றார் அவர். நானும் இரவே பார்த்தேன். என் கதையில் பத்து பேர் அவர்கள் கதையில் இரண்டு பேர். கதைக்களம் பகல் அதில் இரவு. மற்றபடி பேராசை பெருநட்டம் எனும் என் கதைக்கருவும் பணத்தேவைக்காகத் தவறு செய்யப்போய் இருக்கும் பணத்தை கோட்டை விடுவதுமான கதை அமைப்பும் இறுதியில் டம்மி பணம் எனும் கதையின் முக்கிய திருப்பம் க்ளைமாக்ஸாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது.
படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர். பன்னிரெண்டு வருடமாய் நன்கு பழகியவர். இதை சட்டப்பூர்வமாய் எதிர்கொள்ள வழி இருக்கிறதா தெரியவில்லை. ஒரு குறும்படத்தின் முக்கிய தகுதியே தனித்த ஐடியா தான். இருபது வருடமாய் போராடி படம் இயக்க முடியவில்லை. சரி ஒரு குறும்படமாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் உல்டா அடித்து ஓடிடிக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு தமிழில் கதை பஞ்சமா?
எத்தனை சிறுகதைகள் கொட்டிக் கிடக்கிறது. எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையை பயன்படுத்தும் எண்ணம் வருவதில்லை. சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல. சரி சுட்டார்களே ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா அதுவும் இல்லை. ஒரு டயரை திருடப்போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சியெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது” என பதிவிட்டுள்ளார் .