பேனர் விழுந்து இளம் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தின் அதிர்ச்சியால் பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் ரசிகர்களுக்கு தடை விதித்து உள்ளனர்.

வருகிற 19-ந்தேதி சென்னையில் நடைபெறும் விஜய்யின் பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் கட் அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் “பேனர் கவிழ்ந்து சகோதரி சுபஸ்ரீ உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. அஜித் படங்களுக்கு அவரது புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுக்கின்றோம்” என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.