பிரிவினைவாத அரசியல் நடவடிக்கைகளைப் பா.ஜ.க. தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பிரதமர் மோடி உட்பட பா.ஜ. க. தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். முஸ்லிம் தலைவர்கள், அரசர்கள் பெயரில் உள்ள சாலைகள், நினைவிடங்களின் பெயரையும் மாற்றி வருகின்றனர்.
தற்போது, ராஜஸ்தான் கல்வி அமைச்சராக உள்ளவர் வாசுதேவ் தேவ்நானி. சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்-யின் இணைப் பத்திரிகையான பாத்தே கான் சிறப்புப் பதிப்பு வெளியீட்டு விழாவின் அமைச்சர் தேவ்நானி பேசும் போது,மஹாராணா பிரதாப் அக்பரை விடப் பெருமை மிக்கவர். ஹல்டிகாடி போரில் மகாரானா பிரதாப் அக்பரை வென்றிருந்தார். “மஹாராணா பிரதாப் சந்தேகத்திற்கு இடமின்றி ஹல்டிகாடி போரில் வெற்றி பெற்றவர் ஆவார். ஒருவேளை அக்பர் முதல் போரில், வெற்றி வென்றிருந்தால், அதற்குப் பிறகு, மேவார் மீது பல முறை தாக்குதல் நடத்த ஏன் முயற்சிக்க வேண்டும் என்று தேவ்நானி கேட்டார், பிடிஐ தகவல். மேலும், ‘இடது சாரிகள்’ இந்திய வரலாற்றினை வேண்டுமென்றே திரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வழக்கமாக அக்பரின் பெயரை இந்திய வரலாற்றில், “அக்பர் “தி கிரேட்” எனக் குறிப்பிடுவது வழக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின், 2015ல், அந்த ‘சிறந்த’ எனும் பின்னொட்டு மீண்டும் மாநில வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப் பட்டது.
இந்நிலையில், இவருக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதில், அவர் சப்தமின்றி, அக்பர்- கா- கிலா அருங்காட்சியகத்தின் பெயரை அஜ்மெர்-கா-கிலா எனப் பெயரை மாற்றியதைக் கண்டித்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் வந்தபிறகு தான் அமைச்சர் எந்த முன்னறிவிப்புமின்றி, அக்பர் பெயரை மாற்றி அஜ்மீர் எனப் பெயர் சூட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அஜ்மீரில், முகலாயப் பேரரசசர் அக்பர் , 1570 ஆம் ஆண்டில் அவரது மகன் சலீமிற்காக ‘அக்பர் கா கிலா’ கட்டினார்.

இப்போது இது முகலாயர்கள் மற்றும் ராஜபுத்திரர்களின் போர்க்கருவிகளின் அருங்காட்சியகமாக உள்ளது.

வெறுமனே கல்வி அமைச்சரின் ஒரு வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் , இதன்பெயர் ‘அஜ்மீர் கா கிலா மற்றும் சங்கராலயா” எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

1968 ல் ஒரு அரசு கஜட் அறிவிப்பின் மூலம் இந்தக் கோட்டைக்கு ‘அக்பர் கா கிலா’ எனப் பெயரிடப் பட்டது. அதன் பிறகு, அரசு ஆவணங்களில் பெயர் மாற்றி எந்தக் குறிப்பும் காணப்படவில்லை.

அஜ்மீர் வடக்கிலிருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. வான தேவ்நானி, சட்டமுஐகளைப் பின்பற்றாமல், ஒரு கீழமை நீதிமன்ற நீதிபதி ஒருவர் மூலம், வாய்மொழி உத்தரவுப் பெற்று, சப்தமின்றி பெயரினை மாற்றியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, தேவ்நானி “ நான் ஒரு தேசியவாதி என்பதால், ‘பயங்கரவாதிகளின்’ பெயரில் உள்ள கட்டிடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வேன்” எனப் பேசியுள்ளார். இதனைப் பின்னர் மறுத்துத் தான் “தீவிரவாதியெனச் சொல்லவில்லை ஆக்கிரமிப்பாளர் என்று தான் கூறினேன் என்று கூறியுள்ளார்.

தேவ்நானிக்கு இப்போது தரன்னம் கிஸ்டி ( ‘Tarannum Chisty’) எனும் அமைப்பிலிருந்து ஒரு அச்சுறுத்தல் கடிதம் வந்துள்ளது. அச்சுறுத்தல் கடிதம்குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோட்வாலி காவல் நிலையத்துக்குக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.