சென்னை:

அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதன் தலைவர் சுந்தரராஜன் தலைமையில் இன்று சந்தித்தனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர் உதயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதன் தலைவர் செல்லத்துரை தலைமையிலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதன் தலைவர் கண்ணன் தலைமையிலும் முதல்வரை தனித்தனியே சந்தித்தனர்.

பின்னர், பிப்ரவரி 10-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அதன் விழாக்குழுவினர் நிருபர்களிடம் கூறினர். பாலமேட்டில் பிப்ரவரி 9-ம் தேதியும், அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அந்தந்த விழாக்குழுவினர் தனித்தனியே தெரிவித்தனர்.