ஐதராபாத்:

தராபாத்தில் உள்ள  மெக்கா மசூதியில் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற  குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 11 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,  வழக்கு தொடர்பாக உரிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என கூறி   கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு கூறி உள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுவாமி அசீமானந்த் என்பவர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ஐதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள புகழ்பெற்ற தளம் மெக்கா மசூதி. கடந்த 2007-ம் ஆண்டு இந்த மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியாயினர். மேலும், சுமார் 58 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில்,  இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களான சுவாமி  அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என  என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது.  இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இறந்துவிட்ட நிலையில், சந்தீர் வி. டாங்கே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்ரா இரண்டு பேரும் தப்பிவிட்டனர். அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில்,  கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் வழக்கு குறித்து கடந்த  கடந்த 11 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

கோர்ட்டுக்கு வந்த நீதிபதி, இந்த வழக்கில், குற்றவாளிகளை நிரூபிக்கும் வகையில்  உரிய ஆதாரங்கள் இல்லை என கூறி  5 பேரையும் விடுதலை செய்வதாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.