லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

இந்த  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, லால் கிருஷ்ணா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, சதீஷ் பிரதான் மற்றும் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோரைத் தவிர பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். அத்வானி உள்பட சிலருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி,  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கரசேவககர்களால் இடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் கலவரம் மூண்டது. அப்போது மாநிலத்தில் கல்யாண்சிங் தலைமையில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்றது. இதையடுத்து, அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இதையடுத்து, மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை  ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது, பாஜக தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது சதி குற்றச்சாட்டப்பட்டது. ஆனால், கோர்ட்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு , முகாந்திரம் இல்லை என வழக்கில் இருந்து அவர்களை விடுதலை செய்தது.

ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு,  நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து,  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  ஆனால், அலகாபாத் கோர்ட்டும் அவர்களை விடுவித்தது. பின்னர்,  பாரதியஜனதா தலைவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து  சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட  அத்வானி உள்பட 13 பேர் மீதான குற்றச்சதி வழக்கை மீண்டும் விசாரிக்க லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.   லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வழக்கை தினமும் விசாரித்து, 2 ஆண்டில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் கடந்த ஆகஸ்டு மாதம்  20ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், வரும் 30ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்டுள்ள  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்வானி, ஜோஷி, உமாபாரதி உள்பட அனைவரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயல் திட்டமிடப்பட்ட செயல் இல்லை என்றும், அவை திடீரென நடைபெற்ற நிகழ்வு என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கள், மற்றவர்களைத் தடுக்க முயன்றதாகவும், ஆனால், அவர்களை மீறி மசூதி இடிக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சமார் 2 ஆயிரம் பக்கங்களைக்கொண்ட தீர்ப்பில், 600க்கும் மேற்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார்.

இன்று, நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 32 பேரில் 26 பேர் நேரில் ஆஜரானதாக கூறப்படுகிறது.

முன்னதாக  லக்னோ கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கவும் மத்திய உள்துறை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.