பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் பேருந்துகள், ரயில்கள் இயங்கும் என்று அறிவித்த அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைய தடை விதித்து உள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு கூறி உள்ளது.  இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தளர்வு தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு பேசிய எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: பேருந்துகளில் 30 பேர் மட்டுமே பயணிக்கலாம்.  அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். ரயில்கள் மாநிலங்களுக்குள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது.  திரையரங்குகள், மால்கள் தவிர அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்.  டாக்சிகள், ஆட்டோ மற்றும் கேப்களுக்கு, ஓட்டுநர்களுடன் அதிகபட்சம் 2 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கலாம்.
பூங்காக்கள் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையிலும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கலாம். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும். இந்த அனைத்து புதிய தளர்வுகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன என்றார்.