கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 200க்கும் அதிகமான நாடுகளை தாக்கி உள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கிறது. ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து,  தொழில்கள் போன்ற மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
நாடு முழுவதுமே கோயில்களில் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தாலும், பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
தற்போது, ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தலத்துக்குள் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். ஜூன் 8-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவிகித ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவித்தார்.