ஐதராபாத்: ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது சில தளர்வுகளுடன் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.
ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,474 ஆகும். ஊரடங்கு காரணமாக, மார்ச் 23ம் தேதி முதல் அங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தில், பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக இன்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார்.
ஆனால் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றை திறப்பதற்கான தடை தொடரும். கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.