ஈரோடு: பள்ளிகள் திறக்கப்படும் நாளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், பை, ஷூ உள்ளிட்டவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
ஈரோட்டில் பேசிய அவர் கூறியதாவது: வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் நாளன்று, மாணாக்கர்களுக்கு நோட்டு, புத்தகம், பை, ஷூ போன்றவை கிடைக்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பாடப்புத்தகம், நோட்டுகள் போன்றவை 80% அச்சிடப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கால், ஜவுளித் துறை முடங்கியுள்ளது. இதனால், மாணாக்கர்களுக்கான சீருடைகள் தயாரிப்புப் பணிகள் தாமதமாகின்றன.
இருப்பினும், கொரோனா பிரச்சினை சீரானதும் விரைவாக சீருடைகள் தயாரிக்கப்படும். பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழு முடிவு செய்து அறிவிக்கும்.
தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25% மாணாக்கர்களைச் சேர்ப்பதற்காக ரூ.218 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில், கல்விக் கட்டணத்தைச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாதென்று அறிவுறுத்தி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்” என்றார் கல்வி அமைச்சர்.