கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படம் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் அல்போன்ஸ் புத்திரன். இதைத்தொடர்ந்து பிரேமம் என்ற படத்தை மலையாளத்தில் இயக்கினார். இரண்டு படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சுமார் 5 ஆண்டுகள் கழித்து தான் இயக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். பாட்டு என பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கிறார்.

யுஜிஎம் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பு. இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் அல்போன்ஸ்.

இந்நிலையில் அல்போன்ஸ் பெயரைச் சொல்லி துணை நடிகைகளிடமும் பெண்களிடமும் மர்ம நபர்கள் பேசி வருவதாகக் கூறியுள்ளார். அந்த போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: சில எண்களில் இருந்து என் பெயரை சொல்லி சிலர் பேசுகிறார்கள். நான் இந்த எண்களில் அழைத்தால், என்னிடமே அல்போன்ஸ் புத்திரன் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள்.

அதனால் இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் யாரும் ஏமாந்து விடவேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எதையும் அனுப்ப வேண்டாம். இது ஒரு மோசடி வேலை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன் என அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.