சென்னை:

குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 31,858 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,094 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

அதன்படி, சென்னையில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனைத்து ஸ்கிரீனிங் சோதனைகள் நடத்தப்படும் மருத்துவர் ஆலோசனைப்படி மருத்துவமனை, கோவிட் மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்

பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாள்கள் மருத்துவமனைகளிலோ , பாதுகாப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் வீடுகளிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள்

இவ்வாறு  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.