காசியாபாத்:

‘‘சத்தீஸ்கர் மாநில பாஜக அமைச்சரின் பாலியல் உறவு சிடி என்னிடம் உள்ளது’’ என்று கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் வினோத் வர்மா தெரிவித்துள்ளார்.

பிபிசி இந்தி உட்பட பிரபல செய்தி ஊடகங்களில் பணியாற்றியவர் வினோத் வர்மா. சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்திரிகையாளர்கள் மீதான பொய் வழக்குகள் தொடர்பாக செய்திகள் சேகரித்து வந்தார். அங்கு சிலரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக கூறி வினோத் வர்மாவை, அம்மாநில போலீசார் உ.பி. மாநிலம் காசியாபாத்தில் கைது செய்தனர். காவல் நிலையத்தில் போலீசார் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்

அவரிடம் இருந்து சிடிகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ‘‘சத்தீஸ்கர் அமைச்சர் ராஜேஷ் முனத்தின் பாலியல் உறவு சிடி வைத்துள்ளேன். இதன் காரணமாக சத்தீஸ்கர் அரசாங்கம் என் மீது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். என்னிடம் பென் டிரைவ் மட்டுமே உள்ளது. என்னிடம் சிடி இல்லை. தெளிவாக நான் குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன். அமைச்சரை காப்பாற்றுவதற்காக என்னை கைது செய்துள்ளனர்’’ என்று வினோத் வர்மா நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சிடி போலியானது என்று அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி சிங் கூறுகையில், ‘‘ அவரது வீட்டில் இருந்து ஏராளமான சிடிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விஐபிக்களின் பாலியல் உறவு தொடர்பாக ஏதாவது சிடி உள்ளதா? என ஆய்வு செய்யப்படுகிறது’’ என்றார். இந்தியாவின் எடிட்டர்ஸ் கில்ட் உறுப்பினராக வர்மா உள்ளார். அமர் உஜ்லா டிஜிட்டல் மீடியா எடிட்டராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.