சென்னை:

நான் ராசியில்லாதவன் என்று சமூக வலைதளங்களில் கலாய்கிறார்கள். ஸ்டாலினை முதல்வராக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார்.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி  தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற்ற வருகிறது.

நேற்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அவர்  சொல்வதை என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

திமுகவை ஆட்சியில் அமர்த்தவே நான் இங்கு வந்துள்ளேன். ஆனால்,  என்னை ராசியற்றவன் என்று சிலர் கேலி பேசுகிறார்கள், விமர்சனம் செய்கிறார்கள்.  அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை.

தி.மு.கவுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தவன் நான், என்னை  நாடாளுமன்றத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டவர் தலைவர்  கருணாநிதி. அதன்படியே, சங்கரன்கோவில் தொகுதியில்,  தி.மு.க-வை வெற்றி பெற்றதற்கு பரிசாகவே, என்னை அண்ணன் கலைஞர் ராஜ்யசபாவுக்கு  அனுப்பி வைத்தார்.

அதுபோலவே, மயிலாடுதுறை இடைத்தேர்தலில் நானும் கோ.சி.மணியும் இணைந்து திமுகவிற்கு வெற்றியைத் தேடித்தந்தோம். அதற்குப் பின், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பதவியை தி.மு.க-வில் கொடுத்தார்கள்.

கருணாநிதிக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்டது அப்பனுக்கும் பிள்ளைக்குமான மோதல் போன்றதுதான். கருணாநிதிக்கு எப்படி பாதுகாப்பு அரணாக இருந்தேனோ இதே போன்று ஸ்டாலினுக்கும் அரணாக இருப்பேன்.

ஸ்டாலினை தமிழக முதல்வராக்கும் வரை நான் ஓயமாட்டேன். ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று நான் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால், எந்தப் பதவியையும் தேடி திமுக கூட்டணிக்கு நான் வரவில்லை. திமுகவிற்கு ஒரு ஆபத்து என்றால், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

சமூக வலைதளங்களில், வைகோ கூட்டணி வைத்துக்கொள்ளும் கட்சி படுதோல்வியை சந்தித்து வருவதாக விமர்சிக்கப்பட்டு வருவது குறித்து வைகோ இவ்வாறு ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.