புதுடெல்லி: தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகளை இணைக்கும் செயல்திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென்றும், அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

வங்கிகளின் இணைப்பு விபரங்கள்

* பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின்றன.

* கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது.

* இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது.

* யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன.

நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது, “வங்கிகள் இணைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிகளின் இயக்குனர்கள் குழு கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வங்கிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளது. இதில் ஒழுங்குமுறை பிரச்சினைகள் எதுவும் இருக்காது” என்றார்.

2017ம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. தற்போது அந்த வங்கிகளின் இணைப்புக்கு பின்னால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறையும்.