சென்னை: திருமண பதிவு சட்டத்தில் தமிழகஅரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி,  இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டப்படி, மாநிலத்தில் திருமணம் நடைபெறும் இடத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணம் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இதை எளிமைப்படுத்தும் விதமாக 2020–21ம் ஆண்டு பதிவுத்துறை மானிய கோரிக்கையில், மணமகன் மற்றும் மணமகள் இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யும் புதிய வசதியை ஏற்படுத்தும் விதமாக திருமணங்கள் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தில் கீழ்கண்ட சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தின்படி அனைத்து தரப்பினருக்கான திருமணங்களும் கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை அனைவரும் பின்பற்றும் விதமாக, திருமணம் நடைபெற்ற இடத்திலுள்ள சார்பதிவகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமணப்பதிவை மேற்கொள்ளலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.