புதுடெல்லி: ரஷ்யாவுடன் கையெழுத்தாகியுள்ள $5.43 பில்லியன் மதிப்பிலான எஸ்-400 ராணுவ ஒப்பந்தத்தை ரத்துசெய்தால்தான், 5ம் தலைமுறையைச் சேர்ந்த எஃப்-35 ஃபைட்டர் ஜெட்களை இந்தியாவிற்கு வழங்குவோம் என அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது.

ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தொடக்கத்திலிருந்தே எரிச்சலை உண்டாக்கி வருகிறது.

எனவே, இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே உயர்தொழில்நுட்ப பரிமாற்றங்களை கடுமையாக பாதிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதே ஒப்பந்தத்தை துருக்கியும், ரஷ்யாவுடன் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அமெரிக்கா சார்பில், துருக்கி அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டுமென நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், துருக்கி மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, துருக்கி விஷயத்தில் அமெரிக்காவின் இறுதிகட்ட செயல்பாடுகளைப் பார்த்த பின்னரே, இதுதொடர்பாக முடிவெடுக்கலாம் என இந்தியா தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.