வாஷிங்டன்

மெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர் மற்றும் மருமகள் வனிசா ட்ரம்ப் ஆகியோர் விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர்.

டொனல்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் வனிசா ட்ரம்ப் ஆகியோர் இருவரும் 2005 ல் திருமணம் செய்துக் கொண்டனர்.    திருமணத்துக்கு முன்பு மாடலாக இருந்தவர் வனிசா.   தற்போது இருவருக்கும் 40 வயதாகிறது.  மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ள இவர்களின் முதல் குழந்தை 2007 ஆம் ஆண்டு பிறந்தது.

டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் தனது தந்தையின் ஜனாதிபதி தேர்தலின் போது பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத் தக்கது.   மேலும் அவர் சகோதரருடன் சேர்ந்து தனது தந்தையின் வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.    கடந்த மாதம்  வனிசா ட்ரம்ப் வீட்டில் இருந்த போது அவருடைய கணவருக்கு வந்த ஒரு தபால் கவரை பிரித்த போது ஒரு வெள்ளை பவுடர் இருந்ததும் அதன் காரணமாக அவர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தெரிந்ததே.

தற்போது இருவரும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர்.   தங்களின் பிரிவு துரதிருஷ்ட வசமானது என வனிசா தெரிவித்துள்ளார்.  ட்ரம்ப் ஜூனியர், “எங்களின் 12 வருட மண வாழ்வின் முடிவில் இருவரும் தனித்தனியே பிரிய முடிவு செய்துள்ளோம்.   எங்களுக்கு பிறந்துள்ள ஐந்து அழகிய குழந்தைகளே எங்களுக்கு முக்கியம்”  என தெரிவித்துள்ளார்.