வாஷிங்டன்:
அதிபர் டொனால்டு டிரம்பபை விட மீடியாக்களை அதிகம் நம்புவதாக அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக்கிய பிரச்னைகளில் யார் உண்மையை அதிகம் கூறுகிறார்கள்? மீடியாவா? டிரம்பா? என்பது குறித்த வாக்கெடுப்பை குயினியாபியாக் பல்கலைக்கழக நடத்தியது.

இதன் முடிவை அப்பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 52 சதவீதம் பேர் டிரம்பை விட மீடியாவை அதிகம் நம்புவதாக தெரிவித்துள்ளனர். 37 சதவீதம் பேர் மட்டுமே டிரம்பபை நம்புவதாக தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியினரிடம் இந்த கேள்வியை கேட்டபோது 86 சதவீதம் பேர் அதிபரை விட மீடியாவை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

குடியரசு கட்சியை சேர்ந்த 78 சதவீதம் பேர் டிரம்ப் உண்மையை கூறுவதாக தெரிவித்துள்ளனர். மீடியாவில் வருவது போலி செய்தி என்று டிரம்ப் அடிக்கடி விமர்சனம் செய்தை தொடர்ந்து இந்த சர்வே எடுக்கப்பட்டது. மேலும், அமெரிக்க மக்களின் எதிரிகள் மீடியா என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

7 நாட்டு பயணிகளுக்கு டிரம்ப் தடை விதித்தது தொடர்பாக சிஎன்என், ஏபிசி, என்பிசி உள்ளிட்ட மீடியாக்கள் சர்வே நடத்தி முடிவுகளை வெளியிட்டது. இது டிரம்புக்கு எதிராக இருந்ததால் அவர் மீடியாக்களை விமர்சனம் செய்திருந்தார்.