சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசுகிறார் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டு ராவ் குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரியில் இன்று சட்டசபை கூடியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி பேசினார். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் முதல்வர் உரையை முடித்ததும், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, தமது முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுத்து, ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி திட்டம் தீட்டியதாக நாராயணசாமி உள்ளிட்டோர் புகார் தெரிவித்தனர். புதுச்சேரியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன.

இந் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக பேசியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டி உள்ளார். எம்எல்ஏக்களிடம்  உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசுகிறார் என்றும் அவர் கூறி உள்ளார்.