சென்னை

த்திய அமைச்சர் அமித் ஷா தமிழக முதல்வரின் கோரிக்கை படி இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து பரிசீலிக்க உள்ளதாக அதிமுக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

டில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா கடந்த 19 ஆம் தேதி நடந்தது.  அதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்   அனைத்து மாநில முதல்வர்களுக்கும்  இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து அரைமணி நேரம் பேசி உள்ளார்.    அந்த சந்திப்பில் முதல்வர் பழனிச்சாமி, “இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு அனைத்து  உதவிகளும் தமிழக அரசு கொடுக்கிறது. மாதந்தோறும் அவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மற்றும் 20 கிலோ அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களும்  வழங்கப்பட்டு வருகிறது.

மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார். அதன் அடிப்படையில்,  தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்..

இருவரும் தமிழகத்தில் இருக்கும்  அரசியல் நிலவரங்கள், குடியுரிமை சட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம், சட்டம் ஒழுங்கு ஆகியவை குறித்து ஆலோசித்ததாகத் தகவல் வந்தன.  அதைத் தொடர்ந்து. பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபோதும் இதே  கோரிக்கையை முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக நாளேடான நமது அம்மா இதழில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.  அந்த செய்தியில் இலங்கை தமிழர்களுக்க் இரட்டைக் குடியுரிமை வழங்க முதல்வர் அளித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.