டில்லி
கர்நாடகாவில் அரசு அமைக்க முடியாமல் போனதற்காக பாஜக தலைவர் அமித்ஷா அதிரிச்சி அடைந்துள்ளதாக ஆங்கில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கர்நாடக சட்டசபையில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்த போதிலும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என உணர்ந்த எடியூரப்பா வாக்கு கோராமலே ராஜினாமா செய்தார். தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் மஜத ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக தலைவர் அமித்ஷாவை பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் அதனால் பலவாறு கருத்துக்கள் தெரிவித்துள்ளதாகவும் ஆங்கில நாளேடுகள் தெரிவித்துள்ளன.
அந்த ஏடுகளில் காணப்படுவதாவது.
”காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மக்களின் விருப்பத்துக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளது. இதை கர்நாடக மக்கள் சிறிதும் விரும்பவில்லை. அவர்கள் இந்த கூட்டணியினால் அதிருப்தி அடைந்துள்ளனர்” என அமித்ஷா கூறியுள்ளார்.
கர்நாடக வாக்காளர்கள் பாஜகவுக்கு 113 இடங்களில் மட்டுமே அளித்ததால் பாஜகவால் அரசு அமைக்க முடியவில்லை. அத்துடன் தேர்தல் முடிவு வெளி வந்த தினத்தன்று பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது அமித்ஷாவின் அதிருப்தியையே காட்டுகிறது.
”இரு கட்சிகளுக்குமே மக்கள் செல்வாக்கு இல்லை. இரு கட்சிகளுமே சந்தர்ப்ப வாதிகள். இந்த புனிதமற்ற கூட்டணியின் நன்மை, தீமைகள் குறித்து அவர்களுக்கு பின்னால் தெரிய வரும். மக்கள் செல்வாக்கு என்பது அதிகாரத்தினால் கிடைக்காது, அன்பினால் தான் கிடைக்கும் என்பதை அப்போது அக்கட்சியினர் உணர்வார்கள்” என அமித்ஷா கூறி உள்ளார்.
அமித்ஷா காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களை பாஜக பயன்படுத்திக் கொள்ள முயன்றதை மிக எளிதாக மறந்து விட்டார்.
“எடியூரப்பா ஆளுநரிடம் 7 நாட்கள் அவகாசம் கேட்டதாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸார் பொய்த் தகவல் தெரிவித்துள்னர். அது உண்மை எனில் அவர்கள் ஆளுநரிடம் அது போல ஒரு கடிதத்தை கேட்டிருக்க வேண்டும்” என அமித்ஷா கூறி உள்ளார்.
அதை கேட்க வேண்டிய பாஜக தலைவர் உச்சநீதிமன்றத்தில் ஏன் அது குறித்து ஏதும் கூறவில்லை?
”தற்போது காங்கிரசாருக்கு திடீரென மின்னணு வாக்களிப்பு இயந்திரத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வந்துள்ளது. அதாவது தேர்தலில் தோல்வி அடைந்தாலும் நீதிமன்றத்தின் உதவியுடன் ஆட்சி அமைக்கலாம் என்பதால் தற்போது மின்னணு வாக்கு இயந்திரமும், தேர்தல் ஆணையமும் நம்பிக்கைக்கு உரியதாக ஆகிவிட்டன” என அமித்ஷா கூறி உள்ளளார்.
எதிர்க்கட்சிகள் இதுவரை மின்னணு வாக்களிப்பு இயந்திரத்தின் மீதோ அல்லது தேர்தல் ஆணையத்தின் மீதோ நம்பிக்கை வந்துவிட்டதாக தெரிவிக்கவில்லை. இது முழுக்க முழுக்க அமித்ஷாவின் கற்பனை ஆகும்.
”கர்நாடக சட்டசபையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாஜகதான். மக்களின் முடிவு காங்கிரஸுக்கு எதிராக அமைந்துள்ளது. பல காங்கிரஸ் அமைச்சர்களும், ஒரு தொகுதியில் முதல்வரும் தோல்வி அடைந்துள்ளனர். மஜத 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் கொண்டாட என்ன உள்ளது?” என அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜகவுக்கு கிடைத்துள்ள மொத்த வாக்குகள் காங்கிரஸ்க்கு கிடைத்துள்ள வாக்குகளை விட குறைவானதே ஆகும். அத்துடன் பாஜகவில் இணைந்துள்ள எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதா பாக்ஷா கட்சியின் வாக்குகளும் சேர்ந்தே பாஜகவுக்கு தற்போது கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த நாளேடுகள் குறிப்பிட்டுள்ளன.