சேலம்: அமமுக புகழேந்தி, தமது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைகிறார்.

அமமுகவில் செய்தி தொடர்பாளரான புகழேந்திக்கும், பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து, அவருக்கு எதிராக கருத்து கூறினார்.

டிடிவி தினகரனை நம்பி, சென்ற அனைவரும் எல்லாவற்றையும் இழந்து நிற்பதாக குற்றம்சாட்டினார். அதே கையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசினார்.

அப்போதே புகழேந்தி அதிமுகவில் சேரப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தாக கூறினார்.

இந் நிலையில், அமமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவர் தலைமையில் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்களிடம் புகழேந்தி ஆலோனை நடத்தினார்.

பின்னர், கூட்டத்தில் அதிமுகவில் சேருவது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை கட்சியினர் அனைவருக்கும் இந்த நிர்வாகிகள் கூட்டம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் டி.டிவி. தினகரனின் அரசியல் அவதாரம் முடிவுக்கு வந்து விடும். அ.ம.மு.க. காணாமல் போய் விடும். எனவே பதிவு பெறாத ஒரு சங்கத்தைப்போல டி.டி.வி. தினகரன் நடத்தி வரும் அ.ம.மு.க. என்னும் கம்பெனியை நம்பி இனி இளைஞர்கள் வீண்போக வேண்டாம்.

டி.டி.வி. தினகரன் கழக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது கழகத்தை காப்பாற்றுவார் என்று நம்பி அவர் பின்னால் அணி வகுத்தோம். ஆனால் டி.டி.வி. தினகரன் சுயநலத்தாலும், ஆளுமை இன்மையாலும், நிர்வாக திறமையின்மையாலும் அவரது துணை பொதுச் செயலாளர் பதவியையும் காப்பாற்ற முடியவில்லை.

அவரை நம்பி அவர் பின்னால் சென்ற நிர்வாகிகளையும், தொண்டர்களையும் காப்பாற்ற முடியவில்லை. டி.டி.வி. தினகரன் மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்ட நிலையில் பெரும்பாலானோர் விருப்பப்படி, ஆட்சியை சீரோடும், சிறப்போடும் நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று அனைவரும் அ.தி.மு.க.வில் இணைவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.