லெபனான்: உலகம் முழுவதும் அதிவலைகளை ஏற்படுத்திய லெபனான் நாட்டில் குடோனில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடி விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு சுற்றுச் சூழல் துறை அமைச்சர், தகவல் தொடர்புதுறை அமைச்சர் ஆகியோர்  தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே உள்ள குடோனில்  கடந்த 4ந்தேதி மிகப்பெரிய வெடி விபத்து நடந்தது. இந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடி விபத்து காரணமாக,  தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்தன. இடிந்த கட்டிடங்களில் மக்கள் அங்கும் இங்கும் ஓடி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. விபத்து நடைபெற்ற இடங்களில் இருந்து மீட்பு பணிகள் துரித மாக நடைபெற்று, ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்

இதுகுறித்து செய்தி  வெளியிட்ட லெபனான் சுகாதாரத் துறை செயலாளர் ஹமாத் ஹசன், இந்த வெடி விபத்தில் இதுவரை 158 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,  6ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய மடைந்து இருப்பதுடன், பலர் மாயமாகி இருப்பதாகவும்  அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது  என்று தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் கவர்னர் மர்வான் அப்பவுட் கூறும்போது, “100க்கும் அதிகமான மக்கள் மாயமாகி உள்ளனர். இதில் தீயணைப்பு வீரர்களும் அடக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

லெபனான் பிரதமர் ஹசன் கூறும்போது, “சுமார் 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கப் போவதில்லை” என்றார்.

இந்த நிலையில், லெபனானின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டெமியானோஸ் கட்டார் ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். நாட்டின் மிகப்பெரிய விபத்துக்கு பொறுப்பேற்று  அரசாங்கத்தில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்” என்று  கூறி உள்ளார்.

லெபனான் வெடிவிபத்து தொடர்பாக லெபனானின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் மணல் அப்தெல் சமத் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டெமியானோஸ் கட்டார் ஆகியோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.