டெல்லி: வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீட்டர் தொலைவில் அதி உச்ச உயர் தீவிர புயல் மையம் கொண்டுள்ளது. ஒடிசா கடற்கரையை நோக்கி வட மேற்கில் நகர்ந்து பின்னர் அதி தீவிர புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
20ம் தேதி மாலை மேற்கு வங்க மாநிலம் திகா கடற்கரை மற்றும் வங்க தேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும.
எனவே மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்ற இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வானிலை மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா கூறி இருப்பதாவது:
ஒடிசாவின் வடக்குப் பகுதிகள் சூறாவளி காரணமாக அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களான ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ராக் மற்றும் பாலசோர் ஆகிய பகுதிகளில் அதிக வேகம் கொண்ட காற்றோடு, குறிப்பாக மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்று கூறினார்.