அழகான வட்ட முகமும், குறும்பு கண்களும், சிவப்பு புள்ளி போட்ட கவுனும் அணிந்திருக்கும் குட்டி தேவதைதான் அமுல்பேபி. எங்காவது ஒரு கொழுக் மொழுக் பாப்பாவைக் கண்டால் அதை அள்ளியெடுத்து “அமுல் பேபி” என்று கொஞ்சுவது வழக்கம்.

amul4

அமுல் பால்பொருட்கள் விளம்பரத்தில் வரும் இந்த கற்பனை குழந்தைக்கு இப்பொது வயது 50 தொட்டுவிட்டது. இந்த பாத்திரம் இவ்வளவு பிரபலமடைந்ததற்கு காரணம் இந்த குழந்தை பாத்திரத்தை வைத்து அமுல் நிறுவனம் துளியும் பயமின்றி சமூக நிகழ்வுகளை கிண்டல் செய்யும் விதத்தில் உருவாக்கிய விளம்பரங்கள்தான். இந்த பாத்திரத்தை உருவாக்கியவர் சில்வர்ஸ்டர் டகுன்கா என்ற விளம்பர விற்பன்னராவார்.

amul3

டகுன்காவுக்கு எந்த தடையும் விதிக்காமல் சும்மா புகுந்து விளையாடுங்க என்று அமுல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வர்கீஸ் குரியன் கொடுத்த கருத்து சுதந்திரமே இந்த விளம்பரத்தின் இமாலய வெற்றிக்கு இன்னொரு காரணம். ஆனால் சில விளம்பரங்கள் சர்ச்சையை இழுக்காமலும் இல்லை ஒருமுறை விநாயகரை கிண்டல் செய்ததுபோல வந்த விளம்பரம் மும்பையில் சிவசேனா கட்சியினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. இன்னொருமுறை முன்னாள் இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் ஜக்மோகன் டால்மியாவை அமுல்பேபி கலாய்க்க அதுவும் பிரச்சனையாகிவிட்டது.

amul2

மற்றபடி அமுல்பேபி அத்தனை சேட்டைகளும் அனைவரையும் இரசிக்கவே வைத்திருக்கிறது. சமீபத்தில் அமுல் நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துதல் சொன்னபோது அதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், உங்கள் நகைச்சுவை உணர்வு போற்றத்தக்கது என்று குறிப்பிட்டிருந்தார்.
50 ஆண்டுகளைக் கடந்தும் அமுல்பேபியின் அழகும் குறும்பும் குறையாமல் நம்மை மகிழ்விக்கிறது.