சென்னை:
சென்னையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 36-ல் இருந்து 42-ஆக உயர்ந்துள்ளது.

சமீப காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து வந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை ஆறு லட்சத்தை நெருங்கியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் சென்னையில் தொற்று பாதிப்பு 0.5 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், தற்போது மேலும் பாதிப்பு அதிகரித்து, 2.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக சென்னை மாநகராட்சி பகுதியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 36-ல் இருந்து 42 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 21 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளன. இதன்காரணமாக சென்னையில் உள்ளா 15 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்வதோடு, காய்ச்சல் முகாம்களை அதிகரிப்பது, பரிசோதனை எண்ணிக்கையை உயர்ந்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.