மும்பை: தீவிரவாதிகளை போன்று விவசாயிகள் நடத்தப்படுவதாக சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேவையான உணவு பொருள்களுடன் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் டெல்லி எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆகையால் சாலைகளில் விவசாயிகள் உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கூறி இருப்பதாவது:

விவசாயிகள் தீவிரவாதிகளை போன்று நடத்தப்படுகின்றனர். அவர்கள் சீக்கியர்கள் என்பதாலும் பஞ்சாப், அரியானாவிலிருந்து வந்தவர்கள் என்பதாலும், அவ்வாறு நடத்தப்படுகின்றனர். இது விவாசாயிகளுக்கு ஏற்பட்ட அவமானம் என்று தெரிவித்துள்ளார்.