ஷாங்காய்:

சீன கடலில், ஷாங்காய் அருகே ஈரான் நிறுவனத்துக்குச் சொந்தமான  கப்பல், மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் பணியாளர்கள் 32 பேரை காணவில்லை.

சீன கடலில் ஷாங்காய் அருகே பனாமா நாட்டைச் சேர்ந்த  ‘தி சாஞ்சி’ என்ற எண்ணெய் கப்பல் 1 லட்சத்து 36 ஆயிரம் டன் எண்ணெய்யுடன் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது.

அப்போது  அந்த கப்பல், சி.எப். கிறிஸ்டல் என்ற சரக்கு கப்பலுடன் பயங்கரமாக மோதி  விபத்து ஏற்பட்டது. இதில் எண்ணெய் கப்பலில் தீப்பிடித்தது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சீனாவைச் சேர்ந்த  மீட்பு படையினர் விரைந்து சென்று சரக்கு கப்பலின் சிப்பந்திகள் 21 பேரையும் பத்திரமாக மீட்டு விட்டனர். அவர்கள் அத்தனை பேரும் சீன நாட்டினர்.

ஆனால் எண்ணெய் கப்பலில் இருந்த அதன் 32 ஊழியர்களைக் காணவில்லை.  அவர்களில் 30 பேர் ஈரான் நாட்டினர், 2 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்.

எண்ணெய் கப்பல் நேற்று மதியம் வரை எரிந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த கப்பல் ஈரான் நாட்டின் குளோரி கப்பல் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்தது, தென்கொரியா நோக்கி சென்று கொண்டிருந்தபோதுதான் விபத்து  ஏற்பட்டது.

காணாமல் போன எண்ணெய் கப்பல் சிப்பந்திகளை தேடும் வேட்டையில் 8 கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. தென்கொரியா, அந்த பகுதிக்கு ஒரு விமானத்தையும், கடலோரக்காவல்படை கப்பலையும் அனுப்பி வைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.