சென்னை

மாநிலக் காவல்துறை கடந்த வருடம் மீட்டெடுத்து கொடுக்கப்பட்ட பழம்பெரும் சிலைகள் மியூசியத்தின் ஒரு மூலையில் கவனிப்பாரின்றி போடப்பட்டுள்ளது

1000 வருடங்களுக்கும் மேற்பட்ட காணாமல் போன சுமார் 250 கற்சிலைகள் நமது மாநில  காவல் துறையினரால் கடந்த வருடம் மீட்கப்பட்டது.  அவை பல சட்டபூர்வமற்ற அருங்காட்சியகங்களிலும், தனிப்பட்ட சிலருக்கும் விற்கப்பட இருந்தவை.   இந்த சிலைகளை காவல் துறையினர் சென்னை  அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

அருங்காட்சியகத்தின் சிலைகள் பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் இந்த சிலைகள் தீனதயாளன், மற்றும் சுபாஷ் கபூர் போன்ற சிலைக் கொள்ளையர்களால் திருடப்பட்டவை என்றும் இவைகள் வெளிநாட்டில் கடத்தி விற்கப்படுவதற்காக திருடப்பட்டவை என்றும் தெரிவித்தார்

மேலும் கூறுகையில் கிட்டத்தட்ட 110 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சோழர் காலத்திய இச்சிலைகள், தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை, கேகே நகர் கோடவுன்களில் மறைத்து வைக்கப்பட்டவை என்றும், அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் அதை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர் எனவும் குறிப்பிட்டார்

இச்சிலைகள் பாதுகாப்பின்றி வெட்டவெளியில் மூலைக்கொன்றாக அருங்காட்சியகத்தில் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெட்டவெளியில் இருக்கும் சிலைகள் நாளடைவில் உருக்குலைந்து, அதன் உருவம் சிதைந்து, அவைகளின் வயதையும் கண்டறியா நிலை ஏற்படும் என சிலை அறிஞர்கள் கூறுகின்றனர்

கடத்தல்காரர்களிடமிருந்து இவைகள் கைப்பற்ற படியால் இச்சிலைகள் வழக்கிற்கு சம்பந்தமான சாட்சியங்கள் எனவும் இதனை பாதுகாக்கவேண்டியது காவல்துறையின் கடமை என்றும் சிலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

 

ஒரு காவல்துறை அதிகாரி கூறுகையில், சிலைகளை பாதுகாக்க காவல்துறை தயாராக உள்ளதாகவும், ஆனால் அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டியது இந்து அறநிலையத்துறை மற்றும் அருங்காட்சியகத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.

யுனெஸ்கோ நிறுவனத்திடம் இருந்து இந்த சிலைகள் பாதுகாபிற்காக மட்டும் இத்துறைகளுக்கு 90 கோடி ரூபாய்கள் அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது,

ஆனால் இச்சிலைகளை ஒரு மூடப்பட்ட அறையில் கூட வைக்காமல் சென்னை அரசு அருங்காட்சியகம். வெட்டவெளியில் போட்டு வைத்துள்ளது வேதனைக்குரியது