மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, இன்று திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். நேற்றைய தினம் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடிய அமித்ஷாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த அவர், சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, போலாவரம் நீர்பாசன திட்டம், புதிய தலைநகர் அமைத்தல், ஆந்திர பிரிவினையின் போது ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பாஜக உடனான கூட்டணி முறிவு தங்களுக்கு எதிராக அமைந்துவிட்டதாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க அவர் விருப்பமும் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், அமித்ஷா உடன், ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.