ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை 18 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான பசந்த்குமார் விசாகப்பட்டினம் மண்டல மேம்பாட்டு ஆணையத்தில் ஆணையராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக 2012ம் ஆண்டு ஆந்திரா ஆளுநராக இருந்த நரசிம்மனுக்கு இணை செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். அதன்பின்னரே பசந்த்குமாருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளது.
இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கும் பசந்த்குமார் அனைவரும் பேசக்கூடிய ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது தனது மகனின் திருமண அழைப்பிதழ், உடை, உணவு உட்பட அனைத்து செலவுகளையும் ரூ.18,000 க்குள் செய்ய பசந்த்குமார் திட்டமிட்டுள்ளார். இதேபோன்று, மணமகள் வீட்டாரும் ரூ.18,000க்குள் திருமண ஏற்பாடுகளை செய்து முடிக்கவும் பசந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த திருமணம் வருகிற 10ம் தேதி விசாகப்பட்டனத்தில் நடைபெற உள்ளது. ஆடம்பர செலவுகளை தவிர்க்கும் விதமாக குறைந்த பட்ஜெட்டில் திருமணத்தை நடத்த முடிவெடுத்துள்ளதாக பசந்த்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக 2017ம் ஆண்டு நடந்து முடிந்த தனது மகளின் திருமணத்தையும் இதேபோன்று ரூ.16,000 செலவில் பசந்த்குமார் நடத்தி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.