அமராவதி: ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 5ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 6ம் கட்டமாக ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து கல்வி அமைச்சர் சுரேஷ் கூறியதாவது: கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நர்சரி பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை மீண்டும் திறப்பது பல்வேறு தரப்பில் கருத்து கேட்கப்பட்டது.
செப்டம்பர் 5ம் தேதி திறக்கலாம் என்று அனைத்து தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.